திமுக மீதான மாணவர்களின் வெறுப்பை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் 3ஆவது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்நிலையில், கறிக்கோழி பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். உடனே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தினர்.காலை 10.50க்கு கொடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்றே விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயப் பிரச்சினை சார்ந்த விவாதத்தை எழுப்பத் தான் நேரம் கேட்கிறோம். பேரவையில் சில நிமிடம் நேரம் கொடுப்பதில் என்ன பிரச்சினை?” என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு, அதிமுகவினர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் தயாராகி வருகிறது; பதில் தயாரித்துவிட்டு நாளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் வழங்குவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் முக்கிய பிரச்சினை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும். கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற குல விளக்கு திட்டத்தை கடந்த 2021இல் நாங்கள் அறிவித்தோம். ஒவ்வொரு முறையும் அதிமுக தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும்” என்றார்.
மேலும், “மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது. மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினியை அரசு வழங்குகிறது. திமுக மீதான மாணவர்களின் வெறுப்பை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.
