“எனது நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதனை கற்றுக்கொடுத்த கலைஞருக்கும் நன்றி” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா ’கலைஞர் 100’ என்ற பெயரில் இன்று (ஜனவரி 6) நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
அதில் கலந்துகொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில்,
“முன்னாள் முதல்வர் கலைஞர் பங்கேற்கும் மேடைகளில் எப்போதும் ஓரமாக தான் நிற்பேன். அதனால் தான் தற்போதும் நடுமேடையில் நிற்காமல் தொகுப்பாளர் பேசும் இடத்தில் நிற்கிறேன்.
என்னுடைய தமிழ் ஆசான்கள் கருணாநிதி, நடிகர் சிவாஜி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர். சிறுவயதில் என் அக்காவிடம் கலைஞர் மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்துவிடுங்கள் என்று சொல்லுவேன்.
கலைஞர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்துவார். அப்படிப்பட்ட கலைஞர் நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது.
எனது நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த அரசியல் பண்பிற்கு என்னுடைய மரியாதையை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பண்பு எங்கிருந்து கற்றுக்கொண்டது என்பது நமக்கு தெரியும். கலைஞருக்கும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றி.
கலைஞரும், தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும், அரசியலும் எப்போதும் பிரிக்க முடியாதவை. அவர் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார். அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன்.
தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது எதையும் விடக்கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்று கொண்ட பாடம்.
அதைத்தான் நான் என்னுடைய வாழ்க்கையில் பின் தொடர்கிறேன்” என்று கமல்ஹாசன் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Kalaingar100: செல்ல பெயர் சொல்லி அழைத்த கலைஞர்… நினைவுகூர்ந்த தனுஷ்