“தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு” என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி: காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்! நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!
உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!
சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!
அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக
தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!
வாழ்க பெரியாரின் புகழ்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
