தஞ்சாவூர் இளம்பெண் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் பெற்றோரை காவல்துறையினர் இன்று (ஜனவரி 10) கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (வயது 19) . அவரது பக்கத்து ஊரான பூவாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன் (வயது 19). இருவரும் திருப்பூர் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
நாளடைவில் இருவரும் காதலித்து வந்தது பெற்றோருக்கு தெரியவர, இருவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நவீன், ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் அவர்களது நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

இதையறிந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் தங்களது பெண்ணை காணவில்லை என்று பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பின்னர் போலீஸ் தரப்பில் பேசி ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஐஸ்வர்யா தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அவரது உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் எரித்து அடக்கம் செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த நவீன், வாட்டத்தி கோட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரே கொலை செய்ததாக புகாரளித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஐஸ்வர்யாவின் பெற்றோரை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா ஆகியோரை காவல்துறையினர் இன்று கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்களால் அச்சத்தில் பயணிகள்!
தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து: 50 மாணவர்கள் காயம்!Tan
