பொருளாதார வளர்ச்சி 9.69% அதிகரித்துள்ள நிலையில், இதே வளர்ச்சி விகிதத்தில் சென்றால் 2030-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். Thangam thennarasu says tamilnadu
தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகத்தின் வளர்ச்சி என்பது 9.69 % அதிகரித்திருப்பது மிகச்சிறப்பான ஒன்று. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி. இந்த வளர்ச்சி என்பது நிச்சயமாக எட்டப்பட முடியாத வளர்ச்சி.
முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல், கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக நமக்கு இந்த வளர்ச்சி கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதாரம் 15.73 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் 17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தோம். அதில் 8 % பொருளாதார வளர்ச்சி என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு 9.69 % வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மேலும், பொருளாதார நிபுணர் ரங்கராஜன், கே.ஆர்.சண்முகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி 9.3% இருக்கும் என்று தெரிவித்திருந்தனர். அதையும் நாம் கடந்து 9.69 % வளர்ச்சி அடைந்துள்ளோம். விவசாயம், உற்பத்தி துறை, சேவைத்துறை என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளோம்.
இந்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் சென்றால் முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையான 2030-ஆம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடையும்” என்று தெரிவித்தார். Thangam thennarasu says tamilnadu
