நடிகர் அருண் விஜய் நடித்த ஜனனம் திரைப்படத்திற்கு பிறகு, பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் அமையாத போது, நடிகர் விஜய் ஊக்கப்படுத்தியதன் காரணமாகத் தான் மீண்டும் நடிக்க வந்தேன் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் 1995-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். ஆரம்பத்தில் வெற்றிப் படங்கள் கிடைக்காத இவருக்கு துள்ளி திரிந்த காலம், பாண்டவர் பூமி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது.
2003-ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இயற்கை திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன் பிறகு வெளியான இவரது திரைப்படங்கள் ஹிட் ஆகாததால், நடிப்பிலிருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட அவரது குடும்பம் வலியுறுத்தியுள்ளது.
இதனால் தயாரிப்பு பணியில் ஈடுபட முடிவு செய்த அருண் விஜய், நடிகர் விஜயை அணுகியுள்ளார்.
அப்போது நடிகர் விஜய் ஊக்கப்படுத்தியதன் காரணமாகத் தான் மீண்டும் நடிப்பிற்கு வந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் நடிகர் அருண் விஜய், “ஜனனம் திரைப்படத்திற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல், எனக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
அப்போது எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. உடனே அனைவரும் என்னை படம் தயாரிக்க சொன்னார்கள். விஜய் அல்லது அஜித் சாரை வைத்து படம் இயக்க நேரம் கேட்க சொன்னார்கள்.
இதனால், தயாரிப்பு பணிகளில் ஈடுபடலாம் என்று நினைத்து விஜய் சார் மேனேஜரை தொடர்பு கொண்டேன்.

நடிகர் விஜயை அவரது வீட்டில் போய் சந்தித்து, பட வாய்ப்புகள் எதுவும் சரியாக வராததால், வீட்டில் உள்ளவர்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட சொல்கிறார்கள். உங்களுடன் இணைந்து படம் பண்ண நேரம் இருந்தால் சொல்லுங்கள் என்றேன்.
யார் என்ன சொன்னால் என்ன அருண், நீங்கள் என்னை விட சிறப்பாக சண்டைக் காட்சி செய்வீர்கள். நான் அதனை என்னுடைய நண்பர்களிடம் கூறியுள்ளேன்.
மனதை தளர விட்டுவிடாதீர்கள். ஒரு நாள் வரும். நீங்கள் சிறப்பான இடத்தை சினிமாவில் அடைவீர்கள் என்று சொன்னவுடன் நான் கலங்கி விட்டேன்.
அதன் பிறகு தான் நான் சினிமாவில் மட்டும் தான் நடிக்க மட்டும் தான் என்று தீர்மானகரமாக முடிவு செய்தேன்” என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
செல்வம்