இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுக்கச் சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வெறுமனே வெற்றிப்படமாக மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக தியேட்டருக்கு வந்து கண்டுகளிக்கிற வகையில் அதன் உள்ளடக்கம் இருந்ததும் பெரிதாகச் சிலாகிக்கப்பட்டது. அதுவே, ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற கணிப்பையும் பூதாகரப்படுத்தியது.
’தலைவன் தலைவி’ கடந்த ஜூலை 25 அன்று வெளியானது.
அதேநாளில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கிய ‘மாரீசன்’ படமும் தியேட்டர்களில் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. கலவையான விமர்சனங்கள் இதற்குக் கிடைத்தன.
ஒன்றாக ஒரேநாளில் தியேட்டர்களில் வெளியானது போன்றே இவ்விரு படங்களும் ஒன்றாக ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.
வரும் 22ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ‘தலைவன் தலைவி’ வெளியாகிறது. போலவே, அதே நாளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘மாரீசன்’ வருகிறது.
ஓடிடியில் இவ்விரு படங்களுமே தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாவதால் அவற்றுக்கான வரவேற்பும் பாராட்டுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘நிகழ்வது என்ன’ என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்..!
