இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்திய இருமல் மருந்துகளை அருந்தியதால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏற்றுமதி மருந்துகளின் தரம் குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் மாதிரிகளை அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவுஹாத்தியில் உள்ள ஆய்வகங்களில் ஏதேனும் ஓர் ஆய்வகத்தில் மருந்துகள் சோதனை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மருந்து தயாரிப்புகளை சோதனைக்கு உட்படுத்துவதை, அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் போலியான மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் போலி மருந்துகளை தயாரித்து விற்று வந்த 18 நிறுவனங்களின் உரிமங்களை மருந்து கட்டுப்பாடு அமைப்பு ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.
