தென்காசி மாவட்டத்தில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியை கொடுத்துள்ளார்.

ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று பாறையை தகர்க்கும் நோக்கில் டெட்டனேட்டர் என்னும் வெடியை வைத்து சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையின் போது நான்கு தொழிலாளர்கள் இருந்த நிலையில் வெடி எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் அரவிந்த் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்கள் மற்ற தொழிலாளிகளை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அசிம் ஜான்சன், ராஜலிங்கம் ஆகிய தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
ஆலங்குளம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்