தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures rising 4° Celsius
தமிழகத்தில் சமீப நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்றைய தினம் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 19-29° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.2° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை சமவெளிப்பகுதிகளில் கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 26) வெளியிட்ட அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
எனவே இன்று (ஏப்ரல் 26) முதல் மே 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில்,அசௌகரியமும் ஏற்படலாம்” என்று கூறியுள்ளது. Temperatures rising 4° Celsius
