ஆந்திராவில் கலவரம்: பேருந்து சேவைகள் நிறுத்தம்!

Published On:

| By Selvam

telugu desam ysrcp clash bus service

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்குமிடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக போக்குவரத்து சேவை இன்று (ஆகஸ்ட் 5) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சரிவர செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு யுதா பேரி என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேரணி சென்று வருகிறார்.

சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியில் நேற்று பேரணி சென்றபோது தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவரமானது. கலவரத்தை கட்டுப்படுத்த இரண்டு கட்சியினர் மீதும் காவல்துறை தடியடி நடத்தினர்.

இதுகுறித்து சித்தூர் காவல் கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டி கூறும்போது, “புங்கனூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் 20 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். கலவரக்காரர்கள் பேருந்துகளுக்கு தீ வைத்ததால் கண்ணீர் புகைகுண்டு வீசி கலவரக்காரர்கள் கலைக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

கலவரம் காரணமாக வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய அரசு, தனியார், ஆந்திர மாநில தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகம் வரக்கூடிய பேருந்துகளும் திருப்பதி மற்றும் சித்தூர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் திருப்பதி கோவிலுக்கு தமிழகத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வார்கள். கலவரம் காரணமாக ஆந்திராவிற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

செல்வம்

வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம்: வீராங்கனைகளை பாராட்டிய மோடி

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share