நல்லாசிரியர் விருதுடன் வழங்கப்பட்ட பரிசுப்பணத்தை மாணவர்களிடம் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையிலும் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அப்படி நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினமான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுடெல்லியில் நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார்.
அவர்களுக்கு 50,000 ரூபாய் ரொக்கமும், நல்லாசிரியருக்கான பதக்கமும் வழங்கப்பட்டது.
இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் அரசு பள்ளியின் ஆசிரியர் ராமச்சந்திரன் நல்லாசிரியர் விருது பெற்றார். மாணவர்கள் அணியும் பள்ளிச் சீருடையில் வந்து அவர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
இதே போல் புதுச்சேரி மாநிலத்தின் முதலியார் பேட்டையில் உள்ள அர்ச்சுனா சௌப்ராய நாயக்கர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், “உயரிய விருதை ஓர் ஆசிரியராக பெற்றதில் மகிழ்ச்சி.
தமிழக அரசுக்கும் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பள்ளியின் சக ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் கிடையாது எனவும் பெருமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மேலும் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருதுக்கு வழங்கிய 50,000 ரூபாய் தொகையை மாணவர்களிடம் போதை பொருள் விழிப்புணர்வு திட்டத்தை ஏற்படுத்த பயன்படுத்தப் போகிறேன்” என்றும் கூறினார் நல்லாசிரியர் ராமச்சந்திரன்.
வாழ்த்துகள் சார்…. இதற்காகவே இன்னொரு நல்லாசிரியர் விருதும் உங்களுக்குக் கொடுக்கலாம்!
கலை.ரா
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்