டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட 40 வழக்குகளின் நிலை என்ன? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. TASMAC scandal What is the status of 40 firs
தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில் 1000 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது.
அதாவது 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரெய்டு நடத்தியது.
இந்த நிலையில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 22) இடைக்காலத் தடை விதித்தது.
இந்த சூழலில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் இன்று விசாரணைக்கு வந்தது.
அதாவது, டாஸ்மாக்கில் நடந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 40 எஃப் ஐ ஆர் களையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விடுமுறைக் கால அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக்கிற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 40 வழக்குகளின் நிலை என்ன? என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் சார்பில், அடுத்த விசாரணையின் போது வழக்கு தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடுமாறு கோரினர்.
அதேசமயம் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆகியோர், இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மூன்று வாரம் அவகாசம் வேண்டும் என்று வாதம் வைத்தனர்
இதையடுத்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். TASMAC scandal What is the status of 40 firs
