தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள TAPS ஓய்வூதியத் திட்டம் ஒரு சவளைக் குழந்தை என்று தமிழ்நாடு தலைமைச் செயலகம் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 03.01.2026 அன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள். 23 ஆண்டு கால ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்தில், உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் என்பது ஒரு மைல்கல் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
விடுபட்ட அம்சங்கள்
ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் விடுபட்டுள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினைப் பொறுத்தவரையில், முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது அறிமுக நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சவலைக் குழந்தையாக இருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கருதுகிறது.
எனவே, இதற்கு உரிய போஷாக்கிளை அளித்து, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போலவே, பின்வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இதற்கான அரசாணையினை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
- ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும்.
- இதுநாள்வரை பிடித்தம் செய்த தொகையினை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிட வேண்டும்.
- பணி ஓய்வின்போது, பொது வருங்கால வைப்பு நிதித் தொகையினை அசலை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.
- பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறும் வசதியினை வழங்கிட வேண்டும்.
- பணி ஓய்வு பெறும்போது, 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினைத் தொகுத்து வழங்க வேண்டும்.
- மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள், அவரது கணவன்-மனைவி-வாரிசுகள் இறக்க நேரிடும் நிகழ்வுகளில், அப்பணியாளரின் சேமிப்புத் தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.
