தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகத்‌ தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின்‌ திருத்திய ஊதிய விகிதம்‌ மற்றும்‌ 20% தீபாவளி போனஸ்‌ வழங்கிட முதல்வர் ஸ்டாலின்‌ இன்று (நவம்பர் 8) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து தாயகம்‌ திரும்பியவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின்‌ வனப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ பிற பொருத்தமான பகுதிகளில்‌ உள்ள தேயிலைத்‌ தோட்டங்களில்‌ வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகமானது 1976 ஆம்‌ ஆண்டு நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகத்‌ தொழிலாளர்கள்‌ நாளொன்றுக்கு தாங்கள்‌ பெற்றுவரும்‌ தினக்கூலி ரூ.375 திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியை நடைமுறைப்படுத்தும்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌, தனியார்‌ தேயிலைத்‌ தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப்‌ போல, நாளொன்றுக்கு ரூ.438 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று நீண்ட காலமாகக்‌ கோரிக்கை விடுத்து வந்தனர்‌.

மேலும்‌, 3-11-2023 அன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஆ.ராசா‌ இந்தக்‌ கோரிக்கையையும்‌, நீண்டகாலமாக உள்ள இதர கோரிக்கைகளையும்‌ பரிசீலித்து, அரசுக்குப்‌ பரிந்துரைக்க வேண்டுமெனக்‌ கோரியிருந்தார்.

இந்நிலையில்‌, தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகத்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கைகளைப்‌ பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் தனியார்‌ தோட்டத்‌ தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகத்‌ தொழிலாளர்களுக்கும்‌ திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438 வழங்கிடவும்‌, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும்‌ உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர்‌ செலவினம்‌ ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும்‌. அதோடு, TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ்‌ வழங்கவும்‌ முதல்வர் ஸ்டாலின்‌‌ உத்தரவிட்டுள்ளார்‌.

மேலும்‌, தமிழ்நாடு தேயிலைத்‌ தோட்டக்‌ கழகப்‌ பணியாளர்களுக்கு TANTEA ஏழாவது ஊதிய குழுவின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தாமல்‌ இருந்த நிலை முதல்வர் ஸ்டாலின்‌ கவனத்திற்கு வந்ததையடுத்து, பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத்‌ தொகையுடன்‌ உடனடியாக வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இதற்காக TANTEA-க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. இந்த திருத்திய ஊதிய விகிதம்‌ நடைமுறைப்படுத்தப்படுவதால்‌ 212 பணியாளர்கள்‌ பயனடைவார்கள்‌.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

எந்த ஊருக்கு எங்கிருந்து தீபாவளி சிறப்புப் பேருந்துகள் புறப்படும்?

அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ் நடவடிக்கை இல்லை: காவல்துறை

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share