பத்திரப் பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பத்திரப் பதிவுத்துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் 2.0 திட்டத்தை மேம்படுத்தி ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் பதிவுத்துறையில் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் 2.0 திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது. பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
பதிவுத்துறையின் கணினிமயமாக்கல் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனடிப்படையில் தற்போதுள்ள ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் பெருந்தரவு, பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல், சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ரூ.2545 கோடி செலவில் ஸ்டார் 3.0 திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கண்காணிப்பதற்காக தலைமை செயலாளரின் தலைமையிலான மாநில அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.
முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்டார் 3.0 திட்டமானது பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் உயர்தரத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடர்: பிசிசிஐ அறிவிப்பு!
அசராத ஆவுடையப்பன், விடாத அப்பாவு: மீண்டும் அறிவாலயத்தில் நெல்லை பஞ்சாயத்து!
Comments are closed.