சீமான் மீது புகார்: பெங்களூருவில் விஜயலட்சுமியை விசாரித்த தமிழக போலீசார்!

Published On:

| By vanangamudi

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது போலீஸ். Tamilnadu police investigate Vijayalakshmi

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பெரியாரை விமர்சித்த வழக்கில் ஏற்கனவே இதுபோல சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்… அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் தான் ஆஜராகினர்.

அதேபோல நாளையும் சீமான் ஆஜராக வேண்டாம் என்றும் வழக்கறிஞர் மூலம் அவகாசம் கேட்கலாம் என்றும் சீமானுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கிடையில் நேற்று (பிப்ரவரி 25) இரவு சென்னை வளசரவாக்கம் போலீசார் பெங்களூரு சென்றடைந்தனர்.

ஒரு பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற இந்த போலீஸ் டீம் சீமான் மீது புகார் சொல்லி இருக்கிற நடிகை விஜயலட்சுமியை சந்தித்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகி 164 ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார் விஜயலட்சுமி.

அதில் கூறப்பட்ட விவரங்களோடு மேலும் கூடுதல் விவரங்களையும் ஆதாரங்களையும் விசாரணை குழுவினரிடம் விஜயலட்சுமி ஒப்படைத்து இருக்கிறார். அவற்றைப் பெற்றுக் கொண்டு போலீசார் சென்னை திரும்புகிறார்கள்.

நாளை சீமான், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் விஜயலட்சுமியிடம் கேட்டு பெற்ற கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். Tamilnadu police investigate Vijayalakshmi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share