தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழு துணை தலைவரும் பேராசிரியருமான ஜெயரஞ்சன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று (டிசம்பர் 16) சந்தித்து மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்கினர்,
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான திட்டங்கள் மக்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தை முதன் முதலில் மதுரையில் ஆதிமூலம் நகராட்சிப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளான 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

அன்றைய நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளை மண்ணில் இத்திட்டம் அனைத்து 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளான 15.7.2024 முதல் விரிவுபடுத்தப்பட்டது.
அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.
அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுமாக மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர்.
தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகள் காலையில் பசியாற உண்டு படிப்பில் கவனம் செலுத்துவதைக் கண்டு பெருமிதம் கொண்டு இந்த அரசைப் பாராட்டிக் கொண்டுள்ளனர்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்னும் மணிமேகலை காப்பியம் கூறுவதற்கு ஏற்ப இந்நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே முன்னோடியாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.
மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.
தாய்மார்கள் தங்கள் வீட்டில் காலை உணவைத் தவிர்த்து வந்த தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவை விரும்பி உண்பதால் தங்களுடைய கவலை அகன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
புதுமைப்பெண் திட்டம்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிட ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு அடையாளமாகும்.
புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.
இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படுவது போல, “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் திட்டம் 9.8.2024 அன்று கோவையில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்றுப் பயனடைகிறார்கள்.
இந்த திட்டத்திற்காக திமுக அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
புதுமைப்பெண் திட்டம் குறித்து மாநில திட்டக் குழுவினால் ஈரோடு, வேலூர், திருவள்ளூர், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 5,095 மாணவிகள் பயிலக்கூடிய 84 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு 2023 நவம்பர் முதல் 2024 பிப்ரவரி வரை நடைபெற்றது.
இந்த ஆய்வின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள மாணவிகளைவிட கிராமப்புற மாணவிகள் இத்திட்டத்தால் அதிகளவில் பயனடைந்துள்ளனர் என்பதும்,
பொருளாதாரக் குறைவு காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருந்த கிராமப்புற மாணவிகள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு நல்ல வாய்ப்ப்புகளை வழங்கியுள்ளது என்பதும் இத்திட்டப் பயனாளிகளில், பிற்படுத்தப்பட்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சார்ந்தவர்கள் 99.2 சதவீத மாணவிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களில், ஏறத்தாழ 3 சதவீதத்தினர் பெற்றோர் இருவரையும் அல்லது தாய்-தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்கள் என்பதுடன் இவர்களில் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6 சதவீதத்தினரும், விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3 சதவீதத்தினரும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளை இத்திட்டத்தினால் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளன.
எண்ணும் எழுத்தும்
1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகியவற்றைக் கற்று அவற்றை உறுதிப்படுத்துவது “எண்ணும் எழுத்தும்” திட்டம்.
இத்திட்டம் மாணவர்கள் படித்துப் புரிந்து கொண்டு பிழையின்றி எழுத, எண்ண வகை செய்யும் புதிய திட்டமாகும்.

முதலமைச்சர் 13.6.2022 அன்று தொடங்கிவைத்த இத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாகும்.
இத்திட்டம் குறித்த மாநில திட்டக் குழுவின் ஆய்வின் மூலம் தொடக்கக் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
மாணவர்கள் வகுப்பறையில் கற்கும் பொழுது ஏற்பட்ட நேர விரயம் நீங்கி குறித்த நேரத்தில் கற்பதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது ;
பாடத்திட்டத்துடன் உள்ளடக்கத்தைச் சீரமைத்தல், கற்பித்தல்
அணுகுமுறைகள், பொருள் உள்ளடக்கம், ஆசிரியர் பயிற்சி, நேர மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை மேம்பட்டுள்ளன.
இத்திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றம் கருதி அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திவரும் இந்த திட்டங்களால் இளைஞர்கள் மற்றும் மகளிரின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும்; அவர்தம் வாழ்வு எழுச்சி பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…