அரசு கலை, அறிவியல் கல்லூரி பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் இன்று (ஜூன் 10) முதல் அழைக்கப்படுகிறார்கள்.
தமிழக உயர் கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 2 லட்சத்து 58,527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11,010 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினார்கள். இந்தச் சூழலில், கடந்த மாதம் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றார்கள்.
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூன் 10) தொடங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ம் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
இரண்டாம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: இளவயதில் கருவளையங்கள்… எளிமையான தீர்வு உண்டா?
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!