mk stalin letter to pinarayi vijajayan
மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் நடத்தும் போராட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், எல்.டி.எஃப் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் பிப்ரவரி 8ஆம் தேதி கேரளா ஹவுஸில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தவுள்ளனர்.
கேரளாவுக்கு தர வேண்டிய நிதியைத் விடுவிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 6) அவர் கேரள முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “
ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது.
மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது.
மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது
இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது.
இது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMS) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது
இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது, எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது. mk stalin letter to pinarayi vijajayan
மூன்றாவதாக, ஒன்றிய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக்கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது. இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.
நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது.
இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஸ்டாலின், மலையாளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் டெல்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெற்கில் பினராயி விஜயன், கிழக்கில் மம்தா பேனர்ஜி எனஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்!
கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பதிவை டேக் செய்துள்ள பினராயி விஜயன், “ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க முன்னோக்கிச் செல்வோம். உங்களின் ஆதரவு எங்களுடைய முயற்சிக்கு இன்னும் ஊக்கமளிக்கிறது” என நன்றி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிரடி ‘வீரரை’ வளைத்துப்போட்ட ஆர்சிபி… இந்த வாட்டி ‘கப்பு’ மிஸ் ஆகாது!
யாரு அன்ஃபிட்… ஸ்டாலின் தான் அன்ஃபிட்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!