தமிழர் திருநாளான பொங்கல் அன்று நடைபெற இருந்த சி.ஏ பவுண்டேசன் தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் அன்று நடைபெற இருந்த சி.ஏ பவுண்டேசன் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், “பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல, பொங்கல் அன்று நடைபெற இருக்கும் சி.ஏ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, சிஏ தேர்வை ஐசிஏஎஃப் என்ற அமைப்பு சுதந்திரமாக நடத்துவதாகவும் தேர்வு தேதிகளை மத்திய அரசு முடிவு செய்யாது என்றும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை மேற்கோள் காட்டி, “சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். எதில் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் சிலருக்கு தமிழ் விரோதி பிரச்சாரம் பழக்கமாவிட்டது” என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், பொங்கல் திருநாளான ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற இருந்த சி.ஏ தேர்வை, ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றி ஐசிஏஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐசிஏஐ-யின் இந்த முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
