சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கருப்பு சட்டையுடன் அதிமுக?

Published On:

| By Selvam

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ஆம் தேதி நிறைவடைந்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) துவங்குகிறது. கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதனை தொடர்ந்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

2023-24-ஆம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது.

ஆசிரியர்கள் போராட்டம், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறாதது, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, மலேரியா காய்ச்சல், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நீக்கப்பட்ட பன்னீர் செல்வத்திற்கு பதிலாக ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக 2022-ஆம் ஆம் ஆண்டு ஜூலை மாதமே தேர்ந்தெடுத்தனர்.

இதுகுறித்து சபாநாயகருக்கு அதிமுக தொடர்ந்து தகவல் தெரிவித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமாருக்கு இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கடைசியாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து கடிதம் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் இன்று அதிமுக தனது எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வரலாமா என்கிற ஆலோசனை நேற்று இரவு வரை அதிமுக வட்டாரங்களில் நடந்துகொண்டிருந்தது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share