பிறந்தநாளில் மனைவி தற்கொலை: பிரசன்னாவிடம் போலீஸ் விசாரணை!

Published On:

| By Balaji

திமுகவின் செய்தித் துறை இணைச் செயலாளரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற்று பிரபலமானவருமான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இன்று (ஜூன் 8) தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தமிழன் பிரசன்னாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகரில் குடும்பத்தோடு வசித்து வந்த தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவுக்கு இன்று (ஜூன் 8) பிறந்தநாள். இன்று காலை நதியா தன் அறையிலிருந்து காலை 10 மணி வரை எழுந்திருக்காததால், பிரசன்னா கதவை உடைத்துத் திறந்துள்ளார். அப்போது மனைவி நதியா, தூக்கிட்ட நிலையில் மூர்ச்சையாகிக் கிடந்திருக்கிறார். உடனே ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கே, ‘நதியா ஏற்கனவே இறந்து விட்டார்’என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே நதியாவின் தந்தை ரவி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கணவர் தமிழன் பிரசன்னாவை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து இன்று பகல் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தற்கொலை செய்துகொண்ட நதியாவுக்கு இன்று பிறந்தநாள். தன் பிறந்தநாளை நண்பர்களை அழைத்து விமர்சையாகக் கொண்டாட வேண்டுமென்று நதியாக சொன்னதாகவும், ஆனால் அதை பிரசன்னா மறுத்துவிட்டதாகவும் இதன் அடிப்படையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகே நதியா தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ADVERTISEMENT

தமிழன் பிரசன்னா மீது ஏற்கனவே சில பாலியல் புகார்கள் இணையத்தில் வந்தபோதே அவருக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று பகல் கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தமிழன் பிரசன்னா பிற்பகல் 3 மணி வரை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அவர் வழக்கறிஞர் என்பதாலோ என்னவோ எங்களது முதல்கட்ட விசாரணையில் எந்த உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்தும் அடுத்த கட்ட விசாரணைக்குப் பிறகுமே எதையும் சொல்ல முடியும்” என்கிறார்கள்.

ADVERTISEMENT

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share