தமிழ் மருத்துவத்துக்கு தனி துறை: புதிய ஆட்சிக்கு பாஜக கோரிக்கை!

Published On:

| By Balaji

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் தீவிரமாகியிருக்கும் நிலையில், நாடு முழுதும் கொரோனாவுக்கான மருந்துப் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா முதல் கட்ட தாக்குதலின் போதே சித்த மருத்துவத்தை முழுமையாக கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக பாஜகவின் கலை,கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், தமிழகத்தில் அமையப் போகும் புதிய அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 26) தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்காவிட்டால் யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளின் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும்”என்று கோரிக்கை வைத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கென்று ஒரு அமைச்சகம் இருப்பதைப் போல தமிழ்நாட்டில் தமிழ் சித்த மருத்துவத்துக்கென தனியான அமைச்சகம் வேண்டுமென்ற கோரிக்கையை, புதிய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.

**-வேந்தன்**


Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share