வன்முறையை தூண்டும் விதமாக பேசி வீடியோ வெளியிட்டதாக யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன் மீது காரமடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பைக் பிரியர். இவர் பல இடங்களுக்கு பைக்கில் ரைட் சென்று சாகசங்களை செய்து வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில், யூடியூப் ஊடகவியலாளர் ஜயப்பன் ராமசாமி தான் பேசுவதற்கு பணம், பொருட்கள் வாங்கியதாக சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியான நிலையில், அது குறித்து டி.டி.எப் வாசன் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி ஜயப்பன் ராமசாமியை கடுமையாக விமர்சித்த வாசன், ’’கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதையே கிடையாது. வயசுக்கு கொடுக்கும் மரியாதையை அவர் இழந்து விட்டார். அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே கேவலமாக பேசியுள்ளார்.
ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன். கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன்” என அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது காரமடை போலீசார் டி.டி.எப் வாசன் மீது இன்று (மார்ச் 19 ) வழக்கு பதிவு செய்துள்ளனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டி.டி.எப் வாசனுக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கிய ஜயப்பன் ராமசாமிக்கும் சில கருத்து மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
+2 தேர்வு எழுதாத மாணவர்கள் : அமைச்சர் புதுவிளக்கம்!
உதயநிதியை மீண்டும் நடிக்க வைப்பேன்: வடிவேலு