யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீது தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதில் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீது ஐபிசி 294(b). 506 (i) ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் முன்ஜாமீன் கேட்டு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (மே 9) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “யூடியூப் சேனல்கள் தொல்லைகளாகிவிட்டன. அவர்களின் செயல்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது. நேர்காணல் கொடுப்பவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் குற்றவாளியாக, அதாவது ஏ1ஆக சேர்க்க வேண்டும்” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்ட் முன் ஜாமீன் கோரிய விவகாரத்தில் போலீசார் பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக்கூடாது : சந்திரபாபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி