சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட மூன்று சமுதாய சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காளையார்கோவில் அருகே உள்ள மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, மேலச்சேத்தூர், கோலாந்தி ஆகிய மூன்று கிராமங்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தலா ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த வளாகங்கள் கட்டும்போதே தரமின்றி கட்டுவதாக புகார் எழுந்தது.
ஆனால் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோலாந்தியை தவிர்த்து மற்ற இரண்டு சுகாதார வளாகங்களுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டன. தரமில்லாத குழாய்களால் உடைப்பு ஏற்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மூன்று சுகாதார வளாகங்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. தற்போது மேற்கூரையும், சுவரும் சேதமடைந்து வருகின்றன. இதனால் ரூ.15.75 லட்சம் அரசு பணம் வீணாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஊராட்சித் தலைவர் திருவாசகம், ”தண்ணீர்விட்டாலே குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
ராஜ்