இன்று பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 7வரை நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
இரவு 7 மணிக்கு தெப்ப தேர் உற்சவம் துவங்கியது. தெப்ப குளத்தின் நடுவில் வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தெப்பக்குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைந்தது.
தைப்பூச திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு மீண்டும் தொடங்கியது. கடந்த ஒருவாரத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் பாதையாத்திரை வந்த பக்தர்கள் வையம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பேருந்து மோதியது. இதில் சிலர் காயமடைந்தனர்.
நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சக பக்தர்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
–சக்தி