சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 20ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் இந்த மருத்துவனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டு கலைஞர் பிறந்தநாளில் மருத்துவமனை அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தற்போது மருத்துவமனை கட்டப்பட்டு தயாராக உள்ள நிலையில், அதனை ஜூன் 5ஆம் தேதி திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவரும் சம்மதம் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே ஜூன் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால் அவரது வருகை ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பால் வேறு தேதியில் குடியரசு தலைவரை அழைத்து திறக்கலாமா அல்லது வேறு தலைவரை வைத்து திறக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை குடியரசுத்தலைவர் திறந்துவைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவரைக் கொண்டு திறக்காமல் மோடியே திறப்பதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக பிற கட்சிகளுடன் இணைந்து நெருக்கடி கொடுப்பதால் குடியரசு தலைவரை வைத்தே திமுக அரசுக்கு நெருக்கடி வழங்கப்படுகிறதா என்றும் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை வைத்தே கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கார்த்தி பிறந்தநாள்: அதிரடி அப்டேட் கொடுத்த ’ஜப்பான்’ படக்குழு!
சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு!