உடுமலை அருகே +2 மாணவியை, தனது மகனிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்திய ஆசிரியையை பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்திபிரியா. தான் பாடம் நடத்தும் மாணவிகளிடம் தொடர்ந்து அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
ஆசிரியர் மீது கூறப்படும் புகார்கள்!
அதன்படி, மாணவி ஒருவரை வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்து தீண்டாமை உணர்வுடன் நடந்துள்ளார்.
இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்லி வற்புறுத்தி, பாடம் தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இதனால் அழைப்பை ஏற்க மறுத்த மாணவிகளிடம் ”தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன்” என்று மிரட்டியுள்ளார்.
மற்ற ஆசிரியர்களுடன் சண்டையிட்டு விட்டு வகுப்பறையில் வந்து பழிக்குப் பழி என கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைத்துள்ளார்.
சில நேரங்களில் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.
மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று வன்மத்தை விதைத்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தனது பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் இவர், தனது மகனிடம் இரவில் செல்போனில் பேசுமாறும்
கட்டாயப்படுத்தியுள்ளார்.
மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை!
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்தனர்.
மாணவிகள் மட்டுமின்றி அவரால் மன உளைச்சலுக்கு உள்ளான சக ஆசிரியர்களும் சாந்திபிரியா மீது மாவட்ட உயர் கல்வி அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
வட்டார கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி பிரியா குறித்து விசாரணை நடத்தினார். இதில் மாணவிகள், ஆசிரியர்கள் கூறிய புகார்கள் உண்மை என்று தெரியந்தது.
இதனையடுத்து ஆசிரியை சாந்திபிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு செய்யலாமே?
ஆசிரியை சாந்திபிரியா பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
மாணவிகளின் பெற்றோர் புகார் அளிக்காத நிலையில், மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நல ஆணையம் தானாகவே முன்வந்து புகார் கொடுக்கலாம். இதன் மூலம் சாந்தி பிரியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க முடியும்.
ஆனால் சாந்திபிரியா மீது புகார் அளிக்கப்படாத நிலையில் தற்போது 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.
அவர் தற்போது செல்லும் பள்ளியிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமாட்டார் என்பது என்ன நிச்சயம் என்பதே பெற்றோரின் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இது போன்ற ஆசிரியைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் விடுவது மாணவர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனவே மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியை சாந்தி பிரியா மீது போக்சோ சட்டம் பதிவு செய்யலாமே என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
3 பெண் அதிகாரிகள் : வண்ணாரப்பேட்டை சிறுமிக்கு கிடைத்த நீதி!
‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ : ட்ரெண்டிங்கில் கோவை பாட்டி!