தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவம்பர் 9)வெளியிடப்பட்டது.
சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். இதில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சத்யபிரதா சாகு கூறினார்.
16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னையில் மட்டும் 38,92,457 வாக்காளர்கள் உள்ளனர்
19,15,611 ஆண் வாக்காளர்களும் , 19,75,788 பெண் வாக்காளர்களும் , 1058 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்
சென்னையை பொறுத்தவரை 2 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கலை.ரா