கோதுமை ரவையைப் பயன்படுத்தி கஞ்சி, உப்புமா போன்றவற்றை செய்யலாம் என்பதுதான் பலருக்கும் தெரியும். நார்ச்சத்து மிகுந்த கோதுமை ரவையில் எளிமையான முறையில் சுவையான இனிப்பு பொங்கல் செய்தும் கொண்டாடலாம்.
என்ன தேவை?
கோதுமை ரவை – அரை கப்
வெல்லம் – அரை கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் – ஒன்று (பவுடராக்கவும்)
தண்ணீர் – ஒன்றரை கப் + கால் கப்
நெய் – 2 டீஸ்பூன் + சிறிது
முந்திரி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும்.
வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.