வேங்கைவயல் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? – நீதிபதிகள் கேள்வி!

தமிழகம்

வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம்  செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று (ஏப்ரல் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல்துறை தரப்பில், “உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முருங்கை – தால் சூப்

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!

குழந்தை பிறந்த கையோடு… மீண்டும் ‘குட்’ நியூஸ் சொன்ன காயத்ரி… வாழ்த்தும் ரசிகர்கள்..!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *