உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் என்பவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 14 ) தெரிவித்துள்ளது.
பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அக்டோபர் 11ம் தேதி தீக்குளித்தார்.
பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 12ம் தேதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 14) வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ”வேல்முருகன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர், தனக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மனு அளித்தார்.
அதனடிப்படையில் செப்டம்பர்23 ஆம் தேதி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர் பழங்குடியினர் அல்ல என அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அவர், தன்னுடைய சகோதரர் என கூறி, ஒரு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் சாதிச் சான்றிதழை தாக்கல் செய்தார்.
அதை விசாரித்ததில் இளவரசனுக்கும் வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; எந்த உறவும் இல்லை” என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ”கள ஆய்வின் போது அண்டை வீட்டாரிடமும் மற்றும் தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை” என கூறிய நீதிபதிகள்,
வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
”மாவட்ட வருவாய் அதிகாரி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், மற்றும் வேல்முருகன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் சகோதரன் எனக்கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?