வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேர் குற்றவாளிகளாக அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி உறவினர்களால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
உறவினர்கள் ஷகிதா பானு மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன் ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜித் என்கிற வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் 22 பேரை காவல்துறையினர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் போக்சோ குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 2 பெண்கள் உட்பட 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாரீஸ்வரன் என்பவர் விசாரணைக் காலத்தில் இறந்துவிட்டார். மீதமுள்ள 21 பேர் மீதுள்ள வழக்குகளைச் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று ( செப்டம்பர் 15) விசாரித்தார்.
விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜா சுந்தர், நாகராஜ், பொன் ராஜ், வெங்கட்ராமன் ஆகிய 21 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
தொடர் பாலியல் தொல்லை: காவல் அலுவலருக்கு கட்டாய ஓய்வு!