வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300 க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் வண்டலூர் பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பேர் வருகை தந்ததாகவும், அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்ததாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
இந்த பூங்காவில் சுமார் 219 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5அம் தேதி ஊழியர்கள் பணிக்கு வந்த போது பூங்கா நிர்வாகம் சார்பில் பயோமெட்ரிக் வருகை பதிவேடுமுறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.
பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய தவறினால் வேலைக்கு வரவில்லை என கருதி சம்பளம் பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதனால் கோபமடைந்த தினக்கூலி பணியாளர்கள் அன்றைய தினமே பூங்கா நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை கேள்விப்பட்ட பூங்காவின் துணை இயக்குனர் காஞ்சனா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
12 மணி நேரம் பணி என்பதை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், ஊழியர்களின் கௌரவம், சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் பணியாளர்களின் போராட்டம் மாலை 6.30 மணி வரை நீடித்தது.
இதையடுத்து நேற்று காலை பணிக்கு வந்த போதும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டாவது நாளாக பூங்கா நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் பூங்கா நிர்வாகம் சார்பில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தினக் கூலி ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் தெரிவித்த நிலையில், பயோமெட்ரிக் முறை மட்டும் இனிவரும் காலங்களில் கடைபிடிக்கப்படும். அதை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று மாலை 6 மணி வரை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வீடு திரும்பினர்.
இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதோடு விலங்குகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியா
7 ஆவது மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தற்கொலைக்கு முயன்ற 4 பேர் மீது வழக்கு!