தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன மழை க்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (நவம்பர் 20) இரவு 9.20 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில்,
“கடுமையான அடர்த்தி கொண்ட மேகங்கள் இப்போது சென்னைக்கு வடமேற்காக உள்ளன. நாளை அது சென்னைக்கு மேற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவை சென்னைக்கு மிக மிக அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கடுமையான மேகங்களின் ஒரு பகுதி சென்னை மாநகரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கன மழையாக பொழியும்.
நவம்பர் 21 முதல் 22 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கனமழையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதனால் மற்ற வட மாவட்டங்களுக்கு அதிக மழை இருக்காது.
மேகங்கள் இன்னும் அருகில் வரும்போது அடுத்த அப்டேட் வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (நவம்பர் 19) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (நவம்பர் 20) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கு பகுதியிலும்,
சென்னையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
பிரமாண்டமாகத் தொடங்கிய கால்பந்து உலகக் கோப்பை!
பணத்தைக் கரைக்காதீர்கள்… பத்திரப்படுத்துங்கள்: அலாரம் அடிக்கும் அமேசான் தலைவர்