உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதற்கான முன்னேற்பாடாக இன்று(ஜனவரி 6) முகூர்த்தகால் நடப்பட்டது.
அலங்காநல்லூ் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
மூகூர்த்தகால் நடப்பட்டதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வர்ணம் பூசுவது, கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
காளையை பிடிக்க இருக்கும் மாடுபிடி வீரர்கள், தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் காளைகளுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காளைகளுக்கான தகுதி சான்று வழங்கப்பட்டு வருகிறது.

முகூர்த்தகால் நடும் பணியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அலங்காநல்லூர் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி்ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார்.
கலை.ரா
முன்னாள் அமைச்சர் சம்பத்துக்கு முன் ஜாமீன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
குடும்பத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து மிரட்டிய இளைஞர்: சென்னையில் பரபரப்பு!