பொன், பொருள் சேரும் என்று கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த மூன்று பேரை கேரள போலீஸ் கைது செய்திருக்கிறது.
தமிழ்நாடு தர்மபுரியைச் சேர்ந்தவர் பத்மா. இவர் தன் கணவருடன் கடந்த 15 ஆண்டுகளாக கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தினமும் தர்மபுரியில் உள்ள தனது மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் பத்மா போனில் தொடர்பு கொள்ளாததால் சந்தேகம் அடைந்த அவர் மகன் கொச்சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பத்மாவின் செல்போன் கடைசியாக கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவாழா என்ற இடத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினரும் பத்மாவின் உறவினர்களும் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கொச்சியை சேர்ந்த ஷஃபி என்கிற ரஷீத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் பத்மா மற்றும் கேரளா காலடியில் வசித்து வரும் ரோஸ்லி ஆகிய இரண்டு பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பகத்சிங் என்பவரின் வீட்டில் நரபலி கொடுத்தது தெரிய வந்தது.
ரோஸ்லியும் கேரளாவில் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். நரபலி கொடுத்த பின் 2 பேரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் பல இடங்களில் புதைத்துள்ளனர்.

ரஷீது தான் ஒரு சித்தர் என்றும் தனக்கு அபூர்வமான சக்தி உள்ளதாகவும் பெண்களை அழைத்து வந்து வீட்டில் நரபலி கொடுத்தால் சகல விதமான ஐஸ்வர்யங்கள் மற்றும் பொன் பொருள் சேரும் என்று என்று கூறியிருக்கிறார்.
இதனால் பணக்காரர்களாக ஆசைப்பட்டு பகத்சிங்கும் அவரது மனைவியும் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
பகத்சிங் கேரள மாநிலம் பட்டணம்திட்டா இளந்தூர் என்ற இடத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
தற்போது ரஷீத், பகத்சிங், இவரின் மனைவி லைலா ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரஷீத் கொடுத்த தகவலின் பெயரில், திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கலை.ரா
புதிய நிர்வாகிகள்: எடப்பாடி மாவட்டத்தில் கைவைத்த பன்னீர்
சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் 2ஆவது கடிதம்!