தென்னிந்தியாவின் சுவையான காலை உணவு குழிப்பணியாரம். மேலே மொறுமொறுப்பாகவும் இட்லி போல உள்ளே மென்மையாகவும் இருக்கக் கூடிய குழிப்பணியாரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்.
இந்த தக்காளி குழிப்பணியாரம் குளிர்காலத்துக்கேற்ப ஆரோக்கியமான உணவாகவும் அமையும்.
என்ன தேவை?
இட்லி அரிசி – ஒரு கப்
முழு வெள்ளை உளுந்து – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – 2
பூண்டு – 2
கடுகு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எப்படிச் செய்வது?
இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, மிருதுவாக அரைத்து, உப்பு சேர்த்து 7 மணி நேரம் புளிக்க விடவும். தக்காளி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, அரைத்து, புளித்த மாவோடு கலக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
கடலைப்பருப்பை 10 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீர் இறுத்து வதக்கிய கலவையோடு சேர்த்து வதக்கி, மாவில் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும், ஒரு டிராப் எண்ணெய் விட்டு, அதில் மாவை விட்டு, இருபுறமும் வேகவைத்து, எடுத்துப் பரிமாறவும்.