Teachers Should Call Off their Protest

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும்: அன்பில் மகேஷ்

தமிழகம்

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்,  ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள்.

பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துகள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில், நமது அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது.

மேலும், நமது அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : முந்திரிக்கொத்து

ஓ.. இதான் அந்த பழிக்கு பழியா? : அப்டேட் குமாரு

ரஞ்சி கோப்பையில் சதமடித்து… சிஎஸ்கே பவுலர் புதிய சாதனை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0