பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பிய அறிக்கை!

Published On:

| By Monisha

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 20) நிறைவடைகிற நிலையில் அரசு தேர்வுத்துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதையடுத்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.

இந்த தேர்வை ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எழுதினார்கள்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 20) சமூக அறிவியல் தேர்வுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

TN 10th Exam Ends Today

விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 4ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில், ‘மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான,

பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ்வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கிலவழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.

அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கிலவழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும்.

மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் 10ஆம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும்.

தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அந்தப் பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மின் தேவை இந்த ஆண்டு 19,000 மெகாவாட் ஆக உயரும்!

சொந்த மைதானத்தில் ஸ்லோ… ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share