ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் புலி தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் இன்று (பிப்ரவரி 1) சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியில் இருந்து கூடலூர் முதுமலை மைசூர் சாலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள தெப்பக் காட்டில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
தெப்பக்காடு பகுதியில் வீட்டருகே உள்ள காட்டிற்கு மாரி என்ற பெண் நேற்று சென்றுள்ளார். இரவு வரை அவர் வீடு திரும்பாததால் அச்சமடைந்த உறவினர்கள் பக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இன்று காலையில் மீண்டும் தேடியுள்ளனர். இந்த நிலையில் புலி தாக்கி பலத்த காயங்களுடன் காட்டுப்பகுதியில் உடல் கிடந்துள்ளது.
இந்த சம்பவம் மாரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்த ஊர் மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
வனத்துறையும் காவல் துறையினரும் மாரியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் முதுமலை ஊராட்சி தெப்பக்காட்டில் புலி தாக்கிய சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் பொதுமக்கள் இன்று ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரசுதுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி மறியல் போராட்டத்தை கைவிடச்செய்தனர்.
–சக்தி