வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 21) தூத்துக்குடி சென்று ஆய்வு பணி மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அங்கிருந்து நெல்லை சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு ரூ.6,000, தென்காசி மற்றும் குமரி மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் அவர், “மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
சேதமடைந்த குடிசைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410லிருந்து, ரூ.8,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு வழங்கப்படும் நிவாரணம் 30,000 ரூபாயிலிருந்து 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4,000/ வழங்கப்படும்.
மீன்பிடி வலைகள் உட்பட முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 15 ஆயிரமாகவும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா