புதுச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நவம்பர் 30ஆம் தேதி காலை சாலையில் நடைப்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையின் இந்த மரணம் புதுச்சேரியை மட்டுமல்ல, தமிழகத்தைத் தாண்டி உலகம் எங்கிலும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மக்கள் பெருந்திரளாக கூடி யானை லட்சுமி மீது தங்களுக்கு இருக்கும் அன்பை காட்டும் வகையில் இறுதி அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தார்கள்.
யானை லட்சுமிக்கு சுகர் மற்றும் பிபி இருக்கிறது. அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டது என்று முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் மின்னம்பலத்தின் விசாரணையில் யானை லட்சுமி உயிரிழந்ததற்குக் காரணம் பிபியும் இல்லை, சுகரும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் அறநிலைத்துறைக்கும், விலங்குகள் டாக்டருக்கும் நடந்த போராட்டமா, அல்லது தீயசக்திகளின் நாச வேலையா என்றும் யானை லட்சுமியின் மரணம் வெவ்வேறு கோணங்களில் சர்ச்சையாகி வருகிறது.
பிரேதப் பரிசோதனை
தமிழ்நாடு வனத்துறை மருத்துவர்கள் யானை லட்சுமி உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்போது யானையின் உடல் உறுப்புகளை டெஸ்ட்டுக்கு சென்னை எடுத்து சென்றனர். மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க, இறந்துபோன யானை லட்சுமியை அடக்கம் செய்வதற்கு இறப்பு சான்று கேட்டுப் போராடிப் பார்த்தது கோவில் நிர்வாகம்.
ஆனால் பெரிய காட்டு மிருகங்களின் மரணத்திற்கு இறப்பு சான்று தேவையில்லை என்று, கோவில் நிர்வாகமும் வனத்துறையும் சேர்ந்து முடிவு செய்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளிடம், சராசரியாக 80 வயது வரையில் வாழக்கூடிய யானைகளில் லட்சுமி யானை 32 வயதிலேயே இறந்தது எப்படி என்று கேட்டோம். அப்போது அதிரடியான தகவல்கள் கிடைத்தன.
மருத்துவர்கள் இடையே போட்டி!
வனத்துறை மருத்துவராகவும் புதுச்சேரி நகராட்சி கால்நடை மருத்துவமனையின் மருத்துவராகவும் இருந்துவரும் குமரனுக்கும், கோவில் யானையைக் கவனித்துவரும் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் செல்வராஜுக்கும் யானைக்கு யார் ட்ரீட்மென்ட் கொடுப்பது என்ற போட்டி இருந்து வந்தது.
ஒரு கட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் டாக்டர் குமரனிடம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைக்குக் கோவில் நிர்வாகம் விருப்பப்படி மருத்துவரை வைத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி இந்த போட்டிக்கு முடிவு கட்டினர்.
அன்றிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் செல்வராஜ் கவனித்து வந்துள்ளார், இதன் காரணமாக அவசரத்துக்கு லட்சுமி யானைக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க குமரனை அழைத்தால் வரமாட்டார் என்கிறார்கள்.
பரந்த அளவில் உள்ள காட்டில் வாழக்கூடிய யானையைக் கூண்டில் அடைப்பதுபோல் அடைத்தது பெரிய தவறு. கோவில் வாசலில் எட்டுக்கு எட்டு இடத்தில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 12.00 மணி வரையில் ஒரே இடத்தில் யானையை நிற்க வைப்பார்கள், அந்த யானை லட்சுமியும் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தபடி தன்னிடம் வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு யானையின் காலில் ரணம் ஏற்பட்டது. அப்போது வனத்துறை மருத்துவர்கள் பார்த்து பரிசோதனைகள் செய்து அவர்களது ஆலோசனைப் படி முத்தரையப்பாளையத்தில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்தில் விடப்பட்டது லட்சுமி யானை. அதைப் பார்த்துக்கொள்ள பாகனுக்கும் தங்க ஒரு அறை ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.
கோயில் வாசலில் இருந்தால்தான் பணம்
யானை கோவிலில் இருக்கும்போது பாகனுக்கு கை நிறையப் பணம் குவிந்தது. கல்லூரி வளாகத்தில் விட்டதிலிருந்து பாகனுக்குப் பணத்துக்கு வழியில்லை. அதனால் யானைக்கு பாதுகாப்பு இல்லை, பாம்புகள் வருகிறது தற்போது ஆரோக்கியமாக இருக்கும் லட்சுமியை கோவிலுக்கு அழைத்து போகவேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சொல்லிப் பெருத்த வரவேற்போடு மீண்டும் கோவிலுக்கு அழைத்துப் போனார்கள்.
காமராஜர் வேளாண் கல்லூரி வளாகத்தில் இருந்தபோது நன்றாக இருந்த லட்சுமி யானை, கோவிலுக்கு அழைத்து வந்து ஒரே இடத்தில் நிற்க வைத்ததும் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது.
பிபி இல்லை சுகரும் இல்லை!
அக்டோபர் மாதம் உடல்நிலை சரியில்லை என்று யானையின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து அரசு கால்நடை மருத்துவமனைக்கு டெஸ்ட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கிருந்த டாக்டர் குமரன் ஆதிக்கத்தால் டெஸ்ட் எடுக்க ஒத்துழைக்கவில்லை.
அதனால் தனியார் லேப்பில் டெஸ்ட் செய்தபோது பிபி, சுகர் ஏதும் இல்லை அனைத்தும் நார்மல் என்ற ரிப்போர்ட் வந்துள்ளது. அப்படியென்றால் ஒரு மாதத்தில் எப்படி சுகர் பிபி வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு முதுமலை வனத்துறை மருத்துவர் கலைவாணன் என்பவர் பரிசோதனைகள் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு லட்சுமியைக் கவனித்து வரும் ஓய்வு பெற்ற டாக்டர் செல்வராஜிடம் சில ஆலோசனைகள் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.
தினந்தோறும் லட்சுமியைப் பார்த்து பழம் கொடுத்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ”ஒரே இடத்தில் நிற்கவைத்து பிச்சை எடுக்க வைத்த டென்ஷன், அதிக நடமாட்டம் இல்லாதது ஜீரண கோளாறுகள் ஏற்பட்டுச் சரியான பராமரிப்பு இல்லாமல் யானை இறந்துவிட்டது” என்றார்.
காரைக்கால் யானையின் பழ பாதுகாப்பு!
மணக்குள விநாயகர் பக்தர் ஒருவர் நம்மிடம், “காரைக்கால் பெரிய கோயிலில் ஒரு யானை உள்ளது. அந்த யானையிடம் பக்தர்கள் காசு கொடுத்தால் வாங்காது, காசை பாகன்தான் வாங்குவார். அதேபோல் பக்தர்கள் பழம் கொடுத்தால் அதை வாங்கி பக்கத்தில் உள்ள கூடையில் போட்டுவிடும். அந்த அளவுக்கு நல்ல பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறான் பாகன். காரணம் பக்தர்கள் போர்வையில் யாராவது விஷம் கலந்த பழம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். அப்படி கூட லட்சுமி யானையை பழக்கியிருக்கலாம்” என்று ஏனோ ஆதங்கப்பட்டார்.
அரசு கால்நடை மருத்துவர் குமரனைத் தொடர்புகொண்டு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். “விசாரணையில் இருக்கும்போது இப்போது எதுவும் சொல்லமுடியாது. வனத்துறை கன்சலேட்டரை கேளுங்கள்” என்றார்.
ஒரு மாதம் முன்பு எடுத்த டெஸ்ட்டில் அனைத்தும் நார்மல் என்றால் லட்சுமி மரணத்தில் வேறு ஏதாவது மர்மம் இருக்குமோ என்ற அச்சத்தில் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டுக்கு காத்திருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.
–வணங்காமுடி
அடுத்த 3 மணி நேரம்: எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
தலைநகர் யாருக்கு? டெல்லி மாநகராட்சி தேர்தலில் துவங்கிய ஓட்டுப்பதிவு!
மீண்டும் ஒரு யானையை கூட்டி வந்து கோயிலில் வளர்க்கிறேன் என்ற பெயரில் யானையை கொள்ளாதீர்கள்.
காசுக்கு ஆசைப்பட்ட பாகனா? போட்டி போட்ட மருத்துவர்கள் அலட்சியமா? கடைசியில் ஒன்றுமறியாத அந்த வாயில்லா ஜீவன்தான் உயிரை விட்டது. அந்த பாவம் சும்மா விடாது…
Ego killed elephant