கிருஷ்ணகிரி அகழாய்வு: 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

Published On:

| By Selvam

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் சங்கு வளையல் துண்டுகள், தக்களிகள், வட்டச் சில்லுகள் ஆகிய தொல்பொருட்கள்  கிடைத்துள்ளன என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்ணாடி மற்றும் சங்கு வளையல் துண்டுகள், தக்களிகள், வட்டச் சில்லுகள், ஏர் கலப்பையின் இரும்பிலான கொழுமுனை, அம்பு மற்றும் ஈட்டி முனைகள், சுடுமண்ணாலான முத்திரைகள், மணிகள், விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி, எலும்பிலான கிழிப்பான்,கையால் வனையப்பட்ட பானைகள் ஆகிய தொல்பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.

சென்னானூர் அகழாய்வில் காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்கலாம், புதிய கற்காலத்திலிருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவற்றை அறியமுடிகின்றது.

இத்தொல்லியல் தளத்தின் உறுதியான காலத்தினை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லை: ‘அமரன்’ படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel