2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு தேதி 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமெனில் தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வானது மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.
முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
மேலும் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கு 2.30 லட்சம் பேரும், இரண்டாம் தாளுக்கு 4.01 லட்சம் பேரும் என மொத்தம் 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளிற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிர்வாகக் காரணங்களால் பின்பு ஒத்தி வைக்கப்பட்டு, செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
இதனால் தேர்வர்கள் தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ஒத்தி வைக்கப்படுகின்றது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்!