கிச்சன் கீர்த்தனா : கல்கண்டு பொங்கல்
பொங்கல் இல்லாமல் தைப் பொங்கல் கொண்டாட்டமே இல்லை எனலாம். அன்றைய நாள் கடவுளுக்குப் படைக்க பலவிதமான பொங்கல் வகை இருந்தாலும், வித்தியாசமான சுவையில் கூடுதல் இனிப்பு கலந்த இந்த கல்கண்டு பொங்கல் செய்து கொண்டாடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; அதிக ஊட்டச்சத்துகொண்ட இந்த கல்கண்டு பொங்கலை பிரசாதமாக அனைவருக்கும் அளித்து இன்புறுங்கள்.
என்ன தேவை?
பச்சரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை + கல்கண்டு – முக்கால் கப்
நெய்/வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – கால் கப்
ஏலக்காய் – ஒன்று (பவுடராக்கவும்)
உலர்திராட்சை – 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
முந்திரி – 5
பச்சைக் கற்பூரம் – கடுகளவு
குங்குமப்பூ – 5 நரம்பு
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
சர்க்கரை மற்றும் கல்கண்டைப் பொடித்து தனியாக வைக்கவும். பொங்கலைச் சுவைக்கும்போது கல்கண்டை சுவைப்பது சிலருக்குப் பிடிக்காது. பிடிப்பவர்கள் முழுதாகவே கல்கண்டை சேர்க்கலாம்.
குங்குமப்பூவை சிறிது பாலில் ஊற விடவும். குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்/வெண்ணெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு, குக்கரில் அரிசியோடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடிப்போட்டு 4 விசில் வரை வேகவிட்டு, நன்கு மசித்து வைக்கவும்.
இத்துடன் பால் சேர்த்து வேகவிட்டுப் பொடித்த சர்க்கரை-கல்கண்டு கலவை, பச்சைக் கற்பூரம், உப்பு, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கிளறவும். தேவையான அளவு நெய்விட்டு மிதமான தீயில் 8 நிமிடம் கிளறவும்.
இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை (கிஸ்மிஸ்), ஏலக்காய் சேர்த்து கிளறி, இறக்கி பரிமாறவும்.
பொங்கல் வைக்கப் போறீங்களா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!