எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 20) இரவு 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். அப்போது தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் வைத்திருந்த விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்தும் போதிய அளவு மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வதும்,
படகுகளை பறிமுதல் செய்வது ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா