அங்கன்வாடி மையங்களுக்கான வணிக மின்கட்டண முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.6.50, அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50, கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், “தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இதில் 41,133 மையங்கள் அரசு கட்டடங்களில் செயல்படுகிறது. மீதமுள்ள மையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.
தமிழக அரசு, தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு வணிக கட்டண முறையில் மின்கட்டணத்தை வசூலித்து வருகிறது.
இதனால் அதிகபட்சமாக மின்கட்டணமாக 3,000 ரூபாய்க்கு மேல் அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்தி வருகின்றனர். இதை அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்த தமிழக அரசு கட்டாயப்படுத்துவது அரசு விதிகளுக்கு புறம்பானது.
மேலும், வணிக கட்டணம் அமல்படுத்துவதால் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்குவிட அஞ்சுகின்றனர். எனவே தமிழக அரசு அங்கன்வாடி மையங்களுக்கு வணிக கட்டண முறையை ரத்து செய்து, வீட்டு உபயோகக் கட்டண முறைக்கு மாற்ற வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் செலுத்திய தொகையை திருப்பித்தர வேண்டும்” என்று தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜ்
புறக்கணிக்கும் அண்ணாமலை… புலம்பும் பன்னீர் தரப்பு!
உலகிலேயே இரண்டாவது மெதுவான நகரத்தை பிடித்த பெங்களூரு: ஏன் தெரியுமா?
பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு!